Thursday, December 27, 2012

ஆருத்ரா நடனம்


ஆடும் திருவடி தெரிகிறது
ஆனந்தம் அலைபோல் எழுகிறது
பாடும் திருமுறை ஒலிக்கிறது
பரமனின் திருவருள் இனிக்கிறது

ராவணன் தோள்களில் பதிந்தபதம்
ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம்
ஆரூர் வீதியில் நடந்த பதம்
ஆடிய பாதமே சாசுவதம்

தீயென எழுந்தது திருமேனி
தாமரைப் பதந்தனில் இவன்தேனீ
தாயென்றும் வருவான் சிவஞானி
தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ

காலனை உதைத்தது சிவபதமே
காசியில் நடந்ததும் சிவபதமே
மூலமும் முடிவும் சிவபதமே
முக்தி தருவதும் சிவபதமே