Wednesday, December 31, 2014

பேச்சுப் பேச்சென்ன....பெரும்பூனை வந்தக்கால்....

 
குயிலிசை கேட்கக் கூடிய கூட்டம்
வெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு
கூண்டுக்குள்ளே கிடந்த கிளியோ
குய்யோ முறையோ எனக் கத்திற்று
மனனம் செய்தது மறந்து தொலைக்க
கவனம் சிதறிக் கிளி அலறிற்று;

மனப்பா டக்கிளி மறதி தொடர்ந்தால்
தினப்பா டுக்கே திண்டாட்டம் என்பதால்
தளர்ச்சியை மறைக்கத் திட்டம் பிறந்தது
'புரட்சிக் கிளி'யென பட்டம் கொடுத்தனர்
புரட்டுக் கிளியைப் புலவர் என்றனர்

குயில்போல் சுயமாய் கீதம் வராததால்
குயிலைப் பழிக்க கிளிகிளம்பியது ;
தூக்கி விடச்சில காக்கைகள் கிடைத்தன
கிளிகூடமைத்து கத்திய மரங்களில்
கிளையுதிர் காலம் ;அய்யோ பாவம்;

கச்சை கட்டிக் கிளம்பிய காக்கைகள்
இச்-சகம் முழுக்க கிளியின் இடமென
இச்சகம் பேசியே ஏற்றி விட்டன; 
மெச்சி எல்லோரும் மதித்திடவேண்டி
கட்சி கட்டிக் கிளம்பினர் பலரும்;

பச்சைச் சிறகின் இறகொன்றைப் பிடுங்கி
காது குடைந்தால் வேதஞானம்
வளரும் என்றோர் அண்டங் காக்கை
உளறி வைத்ததில் ஊரே திரண்டது
ஏச்சுப் பேச்சில் எந்நேரமும் முழு
மூச்சாய் இருந்த கிளியின் சிறகை
ஊர்ச்சிறு வர்களும் பிடுங்கத் தொடங்க
கீச்கீச் என்று கதறிற்று கிளியே!