மரபின் மைந்தன்
Tuesday, September 10, 2013
ஊழி உலுக்கியவன்
கானமெழுப்பிய பேரிகை ஒன்றினைக்
கட்டிலில் போட்டது யார்?அட
கட்டிலில் போட்டது யார்?
யானை உலுக்கிய ஆல மரமொன்றின்
வேரை அசைத்தது யார்?அட
வேதனை தந்ததும் யார்?
ஏறிய நெற்றியை மீறிய மீசையை
எங்கோ மறைத்தது யார்-அட
எங்கோ மறைத்தது யார்
கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு
ககனம் நிறைத்தது யார்-யுகக்
கதவை உடைத்தது யார்?
வந்த நெருப்பிடம் வாஞ்சை வளர்த்தவன்
வற்றிய மேனிதந்தான் -வாடி
வற்றிய மேனிதந்தான்
சொந்த நெருப்பினை செந்தமிழ் ஆக்கியே
ஜோதி வடிவுகொண்டான் -புது
நீதி பலவும்சொன்னான்
பாற்கடல் நக்கிய ராட்சசப் பூனையின்
பாட்டையில் கால்பதித்தான் -எங்கள்
பாரதி கால்பதித்தான்
ஏக்கம் வளர்த்தவன் ஏழு கடலையும்
ஏந்தி இதழ்பதித்தான் -அதில்
காளி ரசம் குடித்தான்
மேனியின் வீணையில் ஓடும் நரம்புகள்
மேதைமைப் பாட்டிசைக்கும்-அவன்
தாங்கிய கூடசைக்கும்
வானம் குலுங்கிட ஊனும் விதையவன்
ஊனில் ஒளிந்திருக்கும்-அதில்
ஊழி அதிர்ந்திருக்கும்
ஆண்டுகள் எத்தனை ஆயினும் பாரதி
ஆளுமை வியாபகமே-அவன்
ஆண்மையின் ஞாபகமே
நீண்டிடும் பாதையின் நிர்மல வெய்யிலாய்
நிற்கும் அவன்முகமே-அவன்
என்றும் நிரந்தரமே
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)