Friday, September 17, 2010

கோடையெனும் பெருவெளியில்...




தூரிகைக் கொடியில் துளிர்க்கும் தளிர்களாய்


பேரறியாத நிறங்களினுலகில்

என்ன நிறமாய் இப்போதிருக்கிறேன்?



ஒற்றைப் புள்ளியில் உராய்ந்த சூரியன்

மற்றொரு புள்ளியாய் சுருங்கிய பொழுதில்

என்னுள் எழுந்த நிலவை என்செய?



வாங்கி வைத்திருந்த வானைச் சுருட்டி

தலைக்கு வைத்துத் தூங்கும் முயலின்

ஈரச் சிலுப்பல் என்னுளோர் வெள்ளமாய்...



கோடை நிலத்தின் கோரைப்புல்வெளி

மூடியும் மறையாக் கற்பக விருட்சம்

எனக்கான கனிகளைக் கனிவித்திருக்கையில்

தனக்கேயான தாளாப்பசியுடன்

தள்ளி நின்று தவித்திருக்கின்றேன்



ஆழியை வீணையாய் ஆக்கி மீட்டிடும்

வாணியின் உள்ளங்கையில் வியர்வையாய்

அடிமுடி தேடிய ஆதிநாள் தவிப்பில்

வெடிபடு நிலத்திடை வெளிவருந் துளியாய்

கசியும் பாறையாய் கமண்டலத் தளும்பலாய்

நிசியில் உருகும் நிசப்த ராகமாய்

எத்தனை வடிவுகள் எடுத்து வருகிறேன்



அசையும் புல்லின் ஆதிதாளத்தில்

இசைமை பிசகா இலைகளின் அசைவில்

மௌனக் கனலாய் மணக்கும் மலர்களில்

கவிழும் அமைதியின் கனத்த இரைச்சலில்

தவமொன்று புரிந்ததும் வரமொன்று கனிந்ததும்

விநாடிகளுக்குள் விரைந்து நிகழ்ந்தன



வாங்கிய வரத்தின் வாரிதிக்குள்ளே

வலம்புரிச் சங்காய் விளைந்ததென் பிரியம்

சங்கின் மடியில் சமுத்திர அலைகளாய்

வந்து போம் கடல்மகள் வருந்திசை எதுவோ

No comments: