Friday, August 15, 2014

கொடிகாக்கும் கோவை

 
 
பந்தயச் சாலை முழுவதும் பார்த்தால்
பச்சைப் பிள்ளையாய் இருந்தது
முந்தானை கொண்டு பாரத மாதா
மூடி அணைத்தது தெரிந்தது
வந்தவர் போனவர் கண்களில் எல்லாம்
வியப்பின் கண்ணீர் நிறைந்தது
"வந்தே மாதரம்" வந்தே மாதரம்"
வெய்யிலும் கானம் பொழிந்தது

கண்ணன் கொடுத்த சேலையின் நீளம்
கோவையின் கொடிமுன் சிறியது
எண்ணம் தோய்ந்து இழையிழையாக
ஏந்திய கொடிதான் பெரியது
வண்ணங்கள் மூன்றிடை வெற்றிச் சக்கரம்
விரிந்த காட்சி அரியது
"கிண்"ணெனநின்றனர் குழந்தைகள் பெரியோர்
கண்முன் வானகம் மலர்ந்தது


கொடியைக் காத்த குமரனின் வழியில்
கூடிய மனிதர்பல் லாயிரம்
துடிக்கும் மனதில் தேசபக்தியின்
தீச்சுடர் எழுதும் காவியம்
படையாய்த் திரண்டு  பாரத நேசம்
புலப்படச் செய்த காரியம்
முடிவே இல்லா மாண்புகள் தொடரும்
முன்னேறும்நம் தாயகம்