Tuesday, September 29, 2015

ஈஷாவில்..ஒருநாள் மௌனத்தில்..


எல்லா சொற்களும் என்முன் வரிசையாய்...
நில்லாச் சொற்களும் நங்கூரமிட்டன;
பொல்லாச் சொற்கள் பொடிப்பொடி ஆயின;
சொல்லாச் சொற்கள் சுரக்கவே யில்லை;

பசித்தவன் எதிரில் பந்தி விரித்தும்
ரசித்தேன் அன்றி ரணமெதும் இல்லை;

முந்திக் கொள்கிற முந்திரிச் சொற்கள்
மந்திர மௌனத்தின் மதுவில் ஊறின;

கண்கள் இரண்டும் கோமுகி ஆகிட
பண்கள் மலர்ந்து பாடல் கனிந்தது;


மூன்றாம் கண்ணின் மெல்லிய திறப்பாய்
ஊன்றிய திருவடி உணரும் சிலிர்ப்பாய்
தேனின் ஒருதுளி திரளும் தவிப்பாய்
ஆன்ற மௌனம் அளிக்கும் அற்புதம்;


பிரபஞ்சம் பிறந்தது மௌனத்தின் கருவில்
பெருமான் அமர்ந்தது மௌனத்தின் உருவில்
நரகம் தொலைந்தது;நிறைந்தது அமைதி
இருவினை எரிந்தது; இது அவன் நியதி;

தவமே மௌனம்;வரமே மௌனம்
சிவமே மௌனம்; சுகமே மௌனம்