Wednesday, October 21, 2015

முக்திச் சுடராய் சிரிப்பவள்


மேற்கே பார்க்கும் அமுத கடேசன்
முழுநிலா பார்ப்பான் தினம்தினம்
ஆக்கும் அழிக்கும் ஆட்டிப் படைக்கும்
அவள்தரி சனமோ சுகம் சுகம்
பூக்கும் நகையில் புதிர்கள் அவிழ்க்கும்
புதிய விநோதங்கள் அவள்வசம்
காக்கும் எங்கள் அபிராமிக்கு
கண்களில் காதல் பரவசம்


செக்கச் சிவந்த பட்டினை உடுத்தி
செந்தழல் போலே ஜொலிப்பவள்
பக்கத் திருந்து பட்டர் பாடிய
பதங்கள் கேட்டு ரசிப்பவள்
தக்கத் திமியென தாளம் கொட்டத்
தனக்குள் பாடல் இசைப்பவள்
முக்கண் கொண்டோன் மோகக் கனலாய்
முக்திச் சுடராய் சிரிப்பவள்


சின்னஞ்சிறிய சந்நிதி அதுதான்
ஜெகத்தின்   மூலக் கருவறை
மின்னல் எறியும் மந்திரவிழிகள்
மெல்லப் படுமோ ஒருமுறை
இன்னும் இன்னும் பிறவிகள் இங்கே
எடுக்கும் அவதிகள் எதுவரை
பொன்னெனும் மொழியால் பிரம்மனைக் கடிவாள்
பிறவிகள் தொடரும் அதுவரை


சிந்துர நிறத்தின் சிங்காரங்களை
சொல்லப் போமோ தமிழிலே
முந்திடும் கருணை முறுவல் கண்டபின்
மயக்கம் தங்குமோ மனதிலே
தந்தவள் அவளே தருபவள் அவளே
திடீரென வருவாள் கனவிலே
எந்த நேரமும் எதிர்ப்படு வாள் அவள்
எத்தனை எத்தனை வடிவிலே