Thursday, October 22, 2015

அந்த மூன்று பெண்கள்


 அந்த மூன்று பெண்களுக்கும்
  அன்புமட்டும் தெரியும்
அந்தமூன்று பெண்களாலே
அற்புதங்கள் நிகழும்
அந்தமூன்று பெண்கள் பார்க்க
அவதி யாவும் அகலும்
அந்த மூன்று பெண்களாலே
உலகம் இங்கு சுழலும்


கலைமகளின் கருணை கொண்டு
கல்வி கற்பான் சிறுவன்
அலைமகளின்ஆசிபெற்று
ஆட்சி கொள்வான் இளைஞன்
மலைமகளும் மனது வைத்தால்
மேன்மைகொள்வான் மனிதன்
விலையிலாத இவர்வரங்கள்
வாங்கியவன் தலைவன்


சாத்திரங்கள் இவர்கள்புகழ்
சாற்றிநிற்கும் நாளும்
ராத்திரிகள் ஒன்பதுமே
ரஞ்சிதமாய் ஜாலம்
மாத்திரைப் பொழுதுகூட
மறந்திடாமல் நாமும்
காத்துநிற்கும் அன்னையரை
கருத்தில்வைத்தால் போதும்


மங்கலங்கள் சூழ்கவென்று
மூவருமே அருள
இங்குமங்கும் எந்தநாளும்
இன்பமெல்லாம் நிறைய
சங்கடங்கள் அத்தனையும்
சடுதியிலே அகல
எங்கள் மூன்று அன்னையரே
எங்கள் இல்லம் வருக