Sunday, November 22, 2015

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -4

சிறுகதையின் வடிவம்தான் அதன் வெற்றியின் மிக முக்கியமான அம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கவிதையொன்றில் "முடிக்கத் தெரியாத சிறுகதையை குறுநாவல் என்று கூப்பிட்ட மாதிரி" என்று கிண்டல் செய்தகவிஞர் வைரமுத்து தன்சிறுகதைகளை மிக நேர்த்தியாகக் கொண்டு
செலுத்துகிறார் என்பது நான் வாசித்துணர்ந்த ஒன்று . இங்கு நான் செய்நேர்த்தியை சொல்லவில்லை.நிரம்பிய குடத்தை அலுங்காமல் எடுத்து இடுப்பில் வைப்பது போல,சிந்தாமல் சிதறாமல் இவரால் கதைசொல்ல முடிகிறது.

திருமணத்திற்கு முன் தன் ஆண்மை குறித்து ஐயம் கொண்ட இளைஞன் ஒருவன் நண்பன் ஒருவன் வழிகாட்டுதலின் பேரில் விலைமகள் வீடு செல்கிறான்." அன்றைக்கு அவள் பெயர் காஞ்சனா"என்பது அந்தக் கதையின் தலைப்பு.பத்திரப்படுத்தும் முன்னெச்சரிக்கைத்தனத்தால் தன்னை அவன் இழந்திருப்பதை கதையின் கடைசிப் பத்திக்குக் கொஞ்சம் முன்னர் அவள் புரிய வைக்கிறாள். உடலியலை சோதிக்கப் போனவனுக்கு உளவியல் தெளிவைத் தருகிறாள். மார்பில் விழுந்தழுதவன் கீழே சரிந்து விழுகிறான்.
கதை முடிகிறது...

''முதன்முதலில் தன் கால்களில் காமமில்லாமல் ஓர் ஆண்மகன் விழுந்துகிடந்த அனுபவத்தை அன்றுதான் அடைந்தாள் அன்றைய காஞ்சனா"

உள்ளே நுழைந்தபோது அவனுக்குக் காமமில்லை. ஐயம்தான் இருந்தது. இப்போது அவனுக்கு ஐயம்நீங்கியது.ஆனாலும் காமமில்லை.நன்றியுணர்வு தான் இருக்கிறது என்பதை கதாசிரியர் முன்னெடுத்து வைக்கவில்லை. வாசகன் உணர்கிறான்.

கதைகளின் தலைப்பு பல நேரங்களில் வாசிப்பனுபவத்துக்குத் தடையாகிப் போகும்.ஆனால் வைரமுத்து சிறுகதைகள் நூலில் பல கதைகளிலும் தலைப்பே அந்த அனுபவத்தை முழுமை செய்கிறது.ஆற்றோடு வந்த பிணத்தைப் பிடித்து நகைகளையும் புடவையையும் எடுத்து வைத்துக் கொள்கிறான்காடையன். சுயநலப் பிண்டமாய் வாழ்பவன்.பிணத்தைப் புதைத்தும் விடுகிறான். துப்பு துலக்கி வரும் பெண்ணின் மாமனார் வகையறாக்களை விரட்டுகிறான். பெண்ணின் தாயார் வருகிற போது அவனிடம் என்ன மாற்றம் என்பதுதான் கதை.

அந்த மாற்றம், அவனுடைய ஆளுமையைத் திருத்துகிற மாற்றமல்ல. ஒரு மனிதனின் தவறுக்கு மற்றொருவர் ஆற்றும் எதிர்வினையின் ஏதோ ஓர் அம்சம் மாற்றத்தை ஏற்படுத்தும். ஜெயகாந்தனின் தவறுகள் குற்றங்களல்ல,அப்படியொரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும்."ஜஸ்ட் எ ஸ்லிப்,நாட் எ ஃபால்" என்று தன்ஸ்டெனோ தரும் மென்மையான மன்னிப்பு அந்த மனிதரிடம் ஏற்படுத்தும் ஆளுமை மாற்றம் அந்தச் சிறுகதையில் அழகாக வெளிப்படும்.

ஆனால் காடையனிடம் நிகழ்ந்தது கணநேர மாற்றம். அந்தத் தாயின் ஆவேசம் அவனை நிலைகுலைய வைத்தது. ஆனால் அவனுடைய கீழ்மைக் குணங்கள் ஏதும் அவனை விட்டு விலகப் போவதில்லை என்று வாசகனுக்குள் பொறிதட்டும் போது கதையின் தலைப்பும் அதனை உறுதி செய்கிறது..
"கொஞ்ச நேரம் மனிதனாயிருந்தவன்".

ஈழப் போராளி ஓருவனின் வாழ்க்கைச் சித்திரமாய் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை,"என்ட மக்களே! எங்கட தலைவரே!" வடிவ அமைதிக்கு மற்றுமொரு சான்று. 

வெவ்வேறு கதைக்களங்கள். பெரும்பாலும் மனித உறவுகள் பற்றியும் உணர்வுகள் பற்றியுமான பதிவுகள்.மற்ற உயிரினங்கள் மீதானகனிவு குறித்தும் பேசும் கதைகள்.இப்படி இந்தத் தொகுப்பின் பலங்கள் பல.

மீண்டும் சொல்கிறேன்.ஒரு படைப்பை வாசிக்கும்போது ஏற்படும் எண்ணங்கள், ஒப்பீடுகள், புரிதல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே
அதுகுறித்த என் குறிப்புகளையோ விமர்சனங்களையோ எழுதுகிறேன்.
வைரமுத்து சிறுகதைகளையும் அப்படித்தான் அணுகியிருக்கிறேன்.

   //  விரிவான ஓர் இலக்கியவிமர்சன அணுகுமுறைக்குக்கூட அவசியமற்ற அளவில் அவை வெளிப்படையாகவே சாதாரணமாக உள்ளன// என்பது ஜெயமோகனின் எண்ணம். அப்படியல்ல என்பது என் எண்ணம். இந்தக் கட்டுரைகளில் இதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

(தேவை ஏற்படின் மீண்டும் பேசுவோம்)