Monday, October 12, 2015

ஏதோ சொல்கிறது


எங்கோ கேட்கும் காலடி ஓசை
ஏதோ சொல்கிறது
இங்கும் அங்கும் அதிரும் சலங்கை
இரவை ஆள்கிறது
குங்கும வாசம் கமழ்கிற திசையில்
காட்சி மலர்கிறது
அங்கயற் கண்ணி ஆளும் பிரபஞ்சம்
 அவளால் சுழல்கிறது


எத்தனை உயிர்கள் உறங்கவைத்தாளோ
எங்கே மறைத்தாளோ
புத்தம் புதிதாய் உயிர்களைப்  படைத்து
பூமியில் இறைத்தாளோ
வித்தகி அவளின் விருப்பங்கள் தானே
விடியலென் றாகிறது
நர்த்தனம் புரியும் நளின மலர்ப்பதம்
நம்முடன் வருகிறது


பீடங்கள் ஆள்பவள் பீஜங்கள் எல்லாம்
புனிதத்தின் விதையாகும்
மூடங்கள் எரிக்கிற முச்சுடர் விழிகள்
முக்தியின் கதவாகும்
பாடல்கள் ரசிக்கிற பைரவி சந்நிதி
பக்தியின் கடலாகும்
தேடல்கள் அடங்கும் தேவியின் திருவடி
தவிப்புக்கு முடிவாகும்