Friday, October 16, 2015

பதில்தருவாள்






விரிவாய் கதைகள் பலபேச-அடி
வேறொரு தெய்வம் வாய்ப்பதுண்டோ
பரிவாய் கேட்டு பதில்பேச-அந்தப்
பரம சிவனுக்கு நேரமுண்டோ
திருவாய் மலர்வாள் பராசக்தி-அதில்
தீர்ந்து தொலையும் நம்கவலை
கருவாய்த் திரண்ட நாள்முதலாய்-நாம்
கண்டிருக்கின்றோம் தாயவளை

எந்தக் கணமும் நம்பின்னே-அவள்
ஏனோ ஏனோ தொடர்கின்றாள்
சந்திப்போம் எனத் திரும்புகையில்-அட
சடுதியில் ஓடி மறைகின்றாள்
வந்த படியே இருக்கின்றாள்-என
வீசி நடந்தால் தொல்லையில்லை
சந்தேகங்கள் வந்தாலோ-அந்தச்
சுந்தரி அதன்பின் வருவதில்லை

வெண்பனி மூடிய முகடுகளில்-அவள்
வெய்யில் கீற்றென விழுகின்றாள்
தண்ணெனக் குளிரும் வைகறையில்-அவள்
தாவரப் பச்சையில் சிரிக்கின்றாள்
மண்ணில் நதியென நடக்கின்றாள்-அலை
மோதிடும் பாறையில் தகிக்கின்றாள்
கண்ணில் நேராய் தெரிவதில்லை-ஆனால்
காட்சிகள் பலவிதம் கொடுக்கின்றாள்

நேற்றின் சுமைகளை  இறக்கச்சொன்னாள்-இந்த
நொடியினில் தன்னுடன் இருக்கச் சொன்னாள்
ஏற்றிய சுடரில் படபடத்தே –அவள்
என்னென்ன கதைகள் எனக்குச் சொன்னாள்!
மாற்றங்கள் நேர்கையில் மனதுக்குள்ளே –ஒரு
மெல்லிய துணிவாய் அவளெழுவாள்
தேற்றும் மழலைச் சொல்லாக –எந்தத்
திசையினில் இருந்தோ பதில்தருவாள்

தாக்குவதாகச் சொன்னவர்கள்-மெல்லத்
தளர்ந்து விழுவதைக் காட்டிடுவாள்
ஏக்கம் எழுகிற பொழுதெல்லாம்-அவள்
ஏதோ ஒருவழி காட்டிடுவாள்
கூக்குரல் கேவல்கள் பொறுப்பதில்லை-ஒரு
கண்ணீர்த் துளிக்கே கனிந்திடுவாள்
பாக்கிகள் வைத்துப் பழக்கமில்லை-என்
பவவினை முழுதாய் போக்கிடுவாள்