Friday, October 16, 2015

பொய்யாத வான்முகில்


அவள்மடியில் ஒருவீணை அவள்தந்த ஸ்வரம் பாடும்
அவள் விழியில் மலர்கருணை அடியேனின் கவியாகும்
அவள் துகிலில் நிறைவெண்மை அது கலையின் மடியாகும்
அவள்வரையும் ஒருகோடு அதுகோலம் பலபோடும்

வாணியவள் வகுத்தபடி வையமிது சுழல்கிறது
பேணியவள் காப்பவையே பூமியிலே நிலைக்கிறது
காணிநிலம் கேட்டவனை கம்பனெனும் மூத்தவனை
ஏணியென ஏற்றியவள் எனக்கும்கூட இடமளித்தாள்

களிதொட்ட இசையெல்லாம் கலைமகளின் குரலாகும்
உளிதொட்ட கல்லையெல்லாம் உயிர்ப்பதவள் விரலாகும்
வளிதொட்ட நாசியிலே வரும்சுவாசக் கலைதந்தாள்
தெளிவுற்ற தத்துவங்கள் தேவதேவி அருள்கின்றாள்

பொய்யாத வான்முகிலாய் புவிகாக்கும் பேரரசி
கொய்யாத மலர்களிலும் கண்சிமிட்டும் பேரழகி
கையாலா காதவனை கவிஞனென வாழ்வித்த
மையாரும் வேற்கண்ணி மலரடிகள் தொழுகின்றேன்