Thursday, October 15, 2015

தேவியின் சிறுவிரல்






மண்ணில் முளைக்கும் எதுவும் நீ
 மனதில் துளிர்க்கும் கவிதை நீ 
விண்ணின் நீல விரிவில் நீ
 விடையில் தொடரும் கேள்வி நீ  
பண்ணில் பொதியும் மௌனம்நீ
 பரவும் காற்றின் பரிவும்நீ       
எண்ணில் எல்லாப் பொருளும் நீ 
எண்ணத் தொலையா எழிலும் நீ 

சூலம் ஏந்தும் கைகள்தான்
 சொக்கட்டானும் உருட்டுதடி      
காலம் உருட்டும் கைகள்தான்
 கவளம் உருட்டிப் போடுதடி 
ஆலம் உண்டோன் பாகத்தில்
 அமுதம் பூத்துச் சிரிக்கிறதே             
தூலம்  ஆடும் ஆட்டத்தை
 தூர நின்று பார்க்கிறதே

வெய்யில் வினைகள் விலகாதோ
 வெள்ளக் கருணை பரவாதோ 
 பொய்யில் தோய்ந்த என் பிழைகள்
 பைரவி நெஞ்சம் மறவாதோ 
 மையாய் மூடும் இருளின்மிசை
 மின்னல் வெளிச்சம் மருவாதோ      
ஐயோ எந்தன் உயிரெல்லாம் 
அம்பிகை பதத்தே மலராதோ

எத்தனை வேடங்கள் போடுவதோ
 எத்தனை பிறவிகள் வாடுவதோ 
  எத்தனை கருவறை மாறுவதோ
 எத்தனை கல்லறை ஏகுவதோ      
வித்தகி பேரருள் விளையாதோ 
வினையின் வேர்களைக் களையாதோ   
தத்தித் தவழ்பவன் நிமிர்ந்திடவே 
தேவியின் சிறுவிரல் நீளாதோ