Tuesday, October 20, 2015

பைரவி பேரருள்






ஒய்யாரக் கண்களில் மையாடும் சாகசம்
ஒருநூறு மின்னல் வனம்
வையத்து மாந்தரை வாழ்விக்கும் அற்புதம்
வினைதீர்க்கும் அன்னைமனம்
கைநீட்டி ஆட்கொளும் கருணையின் உன்னதம்
காளியின் சாம்ராஜ்ஜியம்
நைகின்ற நெஞ்சோடு நலமெலாம் தந்திடும்
நீலியின் நவவைபவம்

பொன்மஞ்சள் பூச்சோடு பேரெழிலின் வீச்சோடு
பைரவி அருள்செய்கிறாள்
தென்றலின் வழியாக தெய்வீக மொழியாக
தயாபரி ஆட்கொள்கிறாள்
சின்னங்கள் நின்றூத சிவிகையதன் மேலேறி
சிங்கார உலாப்போகிறாள்
என்றென்றும் துணையாக ஏக்கத்தின் முடிவாக
எப்போதும் துணையாகிறாள்

தீவிரத் தன்மையாய் திகழ்லிங்க பைரவி
திருக்கோலம் அருட்கோலமே
தேவியின் சந்நிதி தேடினால் நிம்மதி
தேவைகள் ஈடேறுமே
ஓவியம் காவியம் உயர்தனிக் கலைகளின்
உயிரெல்லாம் அவள்ஜாலமே
மேவினள் ஈஷாவில் மேதினி ஈடேற
மேன்மைகள் நமதாகுமே