Saturday, October 13, 2012

அற்புதர்-6






அற்புதரின் கைப்பையில் சில பாம்புக் குட்டிகள் இருக்கும். புற்றில் இருக்கும் பாதுகாப்புணர்வைக் காட்டிலும் அங்கேதான் பலமடங்கு பத்திரமாய் உணரும். அற்புதருக்கு பாம்புகளுடன் அறிமுகம் உண்டு.அவரை பாம்புகளுக்கு அற்புதராய்த் தெரியுமோ என்னவோ அவரின் அற்புதங்களை அவையறியும்.




பாம்புகளை இந்தப் பிரபஞ்சத்தின் அதிர்வுகளை உணர்த்தும் கருவிகள்என்பார் அற்புதர். சின்னஞ்சிறு  பாம்புக் குட்டிகள் சில,நேர்க்கோட்டில் நகர்ந்து கொண்டிருந்தபோது அவற்றுக்கு நெளியக்கற்றுக் கொடுத்தார் அற்புதர். சில அங்குலங்கள் மட்டுமே நகர்ந்த சில பாம்புகளை நெளிந்துநெளிந்து நெடுந்தூரம் நகரப் பழக்கினார்.

பாம்புகள் நெளிகையில் ஏற்படும் உராய்வில் பிறக்கும் உயிர்சக்தி, இந்தப் பிரபஞ்சத்தின் உயிர்ப்புக்கான ஆதாரங்களில் ஒன்றென்பதை அற்புதர்அறிந்திருந்தார்.

அடிக்கடி உமிழ்ந்தால் நஞ்சு,அடக்கி வைத்தால் மாணிக்கம் என்பது அற்புதரைப் பொறுத்தவரை ஒரு குறியீடு. சேமிக்கும் உயிராற்றல் செல்வம் என்பதன் நாகோபதேசமே,நஞ்சு-மாணிக்கம் பற்றிய நம்பிக்கை என்பார் அற்புதர் .

சொல்லாத சொல், ஏவாத எண்ணம். எய்யாத ஆயுதம் ஆகியவற்றின்மௌனத்தவம் முதிர்ந்து முதிர்ந்து சக்தி பெறுவதை பாம்புகள் நன்றாய்உணரும் என்பார் அவர்.

சுருண்ட பாம்பை சீண்டும் உத்தியும் நெளியும் பாம்பை நகர்த்தும் வித்தையும் அற்புதருக்குக் கைவந்த கலை. காலப்போக்கில் அற்புதரின் இருப்பிலேயே நகராப் பாம்புகள் நகரத் தொடங்கின. அவரின் சிறிய
கரவொலியிலேயே 'சரசர"வென்று பாம்புகள் நகரத் தொடங்குகையில் அங்கே பெருகும் உயிர்சக்தியைப் பிரபஞ்சம் உள்வாங்கிக் கொண்டது.

அற்புதரின் மௌனத்தில் கிளம்பும் மகுடிநாதம், ராஜநாகங்களை உசுப்பும் ராக ஆலாபனை.அற்புதரின் அசைவில் பிறக்கும் இசையில்,பாம்புகள் ந்கர வேண்டிய திசை உணர்த்தப்பட்டது.

பாம்புச்சீறலில் அமுதம் திரள்வது, அற்புதரின் அற்புதங்களிலேயே ஆகச்சிறந்ததென்பதை  அறிந்து சிலிர்த்தது ஆகாயம்