Monday, October 22, 2012

நவராத்திரி கவிதைகள்............8

 உன்பாதம் துணையாகுமே


ஆறுகால் கூப்பியே
அழகான வண்டினம்
அன்றாடம்தொழும்தாமரை !

ஈறிலா இன்பங்கள்
எவருக்கும் தருகின்ற
இணையில்லா செந்தாமரை!

பேறுகள் யாவையும்
தேடியே அருளிடும்
திருமகள் அமர்தாமரை!

கூறுமென் கவிதையின்
வரிகளில் பதியட்டும்
திருவடிப் பொன்தாமரை!

---


பாற்கடல் துயில்பவன்
பாதங்கள் வருடிடும்
பொன்மலர்க் கைகள் நீட்டு

தோற்றவர் வெல்லவும்
மாற்றலர் அஞ்சவும்
தாயேநல் வழிகள் காட்டு

கீற்றெனத் தென்படும்
வாய்ப்புகள் கனியவே
வந்துநீ பாதை காட்டு
----


நேற்றுகள் வலித்ததை
நினைவிலே கொள்ளாத
நிலையினை நெஞ்சில் நாட்டு!

அலைமகள் நீவந்து
அமர்கிற நெஞ்சங்கள்
அலைபாய வழியில்லையே!

நிலைகொண்ட உறுதிகள்
நடுங்காமல் வளர்ந்திட
வேறேதும் கதியில்லையே

தலைகளில் மகுடங்கள்
திகழ்வதும் விழுவதும்
தாயேஉன் முடிவல்லவோ

விலையிலாக் கருணையே
வாழ்வெனும் புதிருக்குன்
விழிகளே விடையல்லவோ !

-------
மாலவன் இதயத்தின்
மையமே வையத்தின்
மங்கலக் கீர்த்திமலரே !

நீலமா மேனியில்
நீந்திடும் மீன்விழி
நளினமே! வண்ண வடிவே!

காலத்தின் சுழற்சிகள்
காக்கின்ற அன்னமே
கனதனச் செல்வ நிலையே

ஓலங்கள் தாங்காத
ஒப்பிலாத் தாய்மையே
உன்பாதம்  துணையாகுமே