Tuesday, September 7, 2010

குகைப்பெருமான் -5

கோவை வானொலியில் மார்கழி மாதங்களில் அதிகாலை நேரத்தில் திருப்பாவை-திருவெம்பாவை பாடல்களும்விளக்கவுரைகளும் இடம்பெறும்.அப்படியொரு முறைதிருவெம்பாவைக்கு சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின்விளக்கவுரைகள்இடம்பெற்றன.

                                                          அந்தக்கால சுகிசிவம் 
"ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி"என்ற வரிக்கு,"அவன்
அருட்சோதி,சூரிய சந்திரர்களுக்கே ஒளிதருபவன் என்பதால் பெருஞ்சோதி,ஆகவே அருட்பெருஞ்சோதி" என்று அவர் தந்த
விளக்கம் இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.

மார்கழி மாதக் கிருத்திகைக்கூட்டத்திற்கு,முருகனைத் தவிர அனைவருமே மஃப்ளர்,சால்வைகள் அணிந்துவந்திருந்தோம்.பெரும்பாலான கிராமத்துப் பெரியவர்கள் போல் மணியகாரர்வெங்கிடாஜலக் கவுண்டர்,ஸ்வெட்டர் அணிந்து அதன்மீது வெள்ளைச்சட்டைஅணிந்திருந்தார்.அவருக்கு வானொலியில் ஒலிபரப்பாகும் திருப்பாவைதிருவெம்பாவை விளக்கங்கள் அதிசயமாயிருந்தன.கோயில் நோக்கி நடக்கஆரம்பித்தோம்.

"அதெப்படீங்க! சுகிசிவம் அய்யா தெனோம் எந்திரிச்சு விடிகாலையிலே ரேடியோஸ்டேஷன் போயிருவாருங்களா?" என்று கேட்டார் மணியகாரர். அருகிலிருந்தஇன்னொருவர் அந்த ஊரின் எல்லாம் தெரிந்தஏகாம்பரம்."ஏனுங்கமாமா! நம்மூரிலே வெடிகார்த்தாலஎந்திரிச்சு மார்கழி பஜனைக்குபோயிட்டு வெனாயகங் கோயில்ல பூசைக்கு வாரதில்லீங்களா!அப்படித்தான்போவாங்களாயிருக்கும்.ஏனுங்க தம்பி!அப்படித்தானுங்களே?"என்றார்.




நான்,'இல்லீங்கய்யா! முன்னமே பேசவிட்டு பதிவு பண்ணீடுவாங்க.தினம்
ஒவ்வொண்ணாப் போடுவாங்க!"என்றதும் அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை." தம்பி!மணியகாரரு கேக்கறதுவேற!நீங்கசொல்றது வேற!ரேடியோவில என்னதாம் பதிவு செய்ஞ்சாலும் தெனோம் பேசினாத்தானே
வரும்!தானாஎப்படி வரும்?"என்ற அவரின் கேள்வியை மானசீகமாய் மார்க்கோனிக்கு அனுப்பிவைத்தேன்.


அதற்கு சில வாரங்கள் முன்புதான் சேலத்தில் "சாதனையில் சிறந்தவர்கள்
முதியவர்களா?இளைஞர்களா?"என்ற பட்டிமன்றம், நடந்திருந்தது.
பெரும்புலவர்.பா.நமசிவாயம்நடுவர்.இளைஞர்களே என்ற
அணியில் பேசிய ஒருவர்,"ரேடியோவை,மார்க்கோனிதானே கண்டுபுடிச்சாரு!அவங்கஅப்பாவா கண்டுபுடிச்சாரு"என்று கேட்டார்.
உடனே குறுக்கிட்ட நமசிவாயம் அய்யா,"அதுசரிய்யா! அவங்க
அப்பாதானே மார்க்கோனியையே கண்டுபுடிச்சாரு"என்று ஒரே போடாகப்
போட்டார்.மார்க்கோனிக்கு வந்த மறுவாழ்வைநினைத்துக் கொண்டே நடந்தேன் .கோயில் வந்துவிட்டது.குகைப்பெருமானுக்குஎழுதிய இன்னொரு
துதிமலர் இது:



மூண்டிடும் தீவினை நாற்புறம் சூழ்கையில்

முருகா என்றழைக்கின்ற திறமும்

மனந்தன்னில் அயர்வெனும் கனல்வந்து ஆள்கையில்

வடிவேலைத் துதிக்கின்ற நினைவும்

தூண்டிலில் புழுவெனத் தவிக்கையில் திருத்தணித்

திசையினைத் தொழுகின்ற கரமும்

துயரெதும் உறுகையில் மயில்மிசை உறுகிற

மலர்க்கழல் படிகின்ற சிரமும்

நீண்டிடும் பகை உடல் வதைக்கவே வருகையில்

கடம்புசேர் தோள்களின் துணையும்

நலியாத செல்வமும் அழியாத இன்பமும்

நலமாகக் கவிபேணும் மதியும்

காண்கிற திசையெலாம் புகழுமுன் திருக்குகை

கண்டாலே கைகூடுமே

கனிவான தென்சேரி அடிவாரம் வளர்பால

தண்டா யுதபாணியே

(தொடரும்)

2 comments:

நிலாமகள் said...

பாடல் மிக மிக நயம். ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ஐயா!

Shan said...

Simply superb!wow!