Wednesday, September 22, 2010

கடல் தடங்கள்



சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான்


சிரத்தையில்லாமல் நடக்கின்றேன்

உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான்

ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன்



கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என்

கண்களில் பட்டிடப் போவதில்லை

பலமுறை வருடிய ஓடங்களை-நான்

பார்த்தினி ஏதும் ஆவதில்லை



மூச்சை யடக்கிநான் முத்தெடுத்தேன் -அது

மாலையென் றானபின் கையிலில்லை

வீச்சினை உணர்ந்து உப்பெடுத்தேன் -அது

விரல்களில் கரித்தது தங்கவில்லை



ஓடிப் பொறுக்கிய கிளிஞ்சல்களும்-நகம்

ஒட்டிய கடற்கரை மணல்துகளும்

வாடி யிருக்கிற நேரத்திலே-சில

வார்த்தைகள் என்னுடன் பேசிடட்டும்



காலக் கடல்ரொம்பப் பெரியதுதான் -அது

காட்டி மறைப்பவை ஏராளம்

காலை வருடிய சிற்றலையை-தொட்டுக்

காட்ட முடியுமோ யாராலும்



உப்புக் கடலலை பக்கத்திலே -நான்

உள்ளவன் என்பதைக் காலம் சொல்லும்

எப்போதும் கடலுண்டு என்னுடனே-இதை

இமைக்குள் தெரிகிற நீலம்சொல்லும்

2 comments:

நிலாமகள் said...

//காலக் கடல்ரொம்பப் பெரியதுதான் -அது

காட்டி மறைப்பவை ஏராளம்//
//எப்போதும் கடலுண்டு என்னுடனே-இதை

இமைக்குள் தெரிகிற நீலம்சொல்லும்//

அருமை!!

marabin maindan said...

உங்கள் தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலாமகள்