Friday, September 26, 2014

பைரவி திருக்கோலம்


குங்குமத்தில் குளித்தெழுந்த கோலமடி கோலம்
பங்கயமாய் பூத்தமுகம் பார்த்திருந்தால் போதும்
அங்குமிங்கும் அலைபாய்ந்து அழுதநிலை மாறும்
தங்குதடை இல்லாமல் தேடியவை சேரும்

கைகளொரு பத்தினிலும் காத்தணைக்க வருவாள்
நெய்விளக்கின் நடுவினிலே நித்திலமாய் சுடர்வாள்
வெய்யில்மழை சேர்த்ததுபோல் வெப்பமாகிக் குளிர்வாள்
பைரவியாள் தேரிலேறி பவனிவந்து மகிழ்வாள்

ஆயகலை யாவுமவள் வாயிலிலே கூடும்
தாயவளின் பார்வையிலே நின்றுவிளையாடும்
ஓயும்வினை ஓடவரும் ஓங்கார ரூபம்
வேய்குழலில் வீணையினில் வித்தகியின் நாதம்

பக்தரெல்லாம் பரவசத்தில் பாடியாடி சிலிர்க்க
முக்தரெல்லாம் மூன்றுவிழி மோகனத்தில் லயிக்க
சித்தெரெல்லாம் லிங்கரூப சக்திகண்டு களிக்க
வித்தையெல்லாம் செய்பவளை என்னசொல்லி விளக்க