Monday, September 29, 2014

அபிராமி நீயெனது பக்கம்

 
 
 ஒருநூறு கதைபேசும் கண்கள்-உன்
  ஒளியிதழில் உருவாகும் பண்கள்
கருவாகும் முன்பேநான் கண்டேன்-உனைக்
காணத்தான் பலபிறவி கொண்டேன்

செங்கமலம் போல்நான்கு கரங்கள்-அவை
சிந்துகிற எல்லாமே வரங்கள்
தங்கமுகம் பார்த்தாலே போதும்-எனத்
தவமிருக்கும் ஒருநான்கு வேதம்


கடவூரின் கோவிலிலே நின்றாய்-அமுத
கடேசனுள்ளம் கண்வீச்சில் வென்றாய்
உடலூரில் உயிர்தீபம் தந்தாய்-அதன்
ஒளிபெருக என்னுள்ளே வந்தாய்

தபவாணர் தேடுகிற பதங்கள் -என்
துயர்தீர்த்து செய்கின்ற இதங்கள்
அபிராமி நீயெனது பக்கம்-இனி
அண்டாது ஒருபோதும் துக்கம்

கண்சிமிட்டி நீபார்க்கும் பார்வை-அதன்
கனமௌனம் இசைகூட்டும் கோர்வை
விண்முழுதும் நீதெரியும் அழகு-நீ
வீசிவிட்ட தாடங்கமே நிலவு

வரம்கேட்ட மறுநொடியே கொடுப்பாய்-நீ
வழியெங்கும் துணையாக இருப்பாய்
 தரம்கெட்ட என்னைப்போய் வளர்ப்பாய்-கொஞ்சம்
தடுமாறும் படிசெய்து சிரிப்பாய்

தள்ளாடி விழப்போகும் மகவு-தரை
தொடும்முன்னே அணைப்பதுந்தன் கனிவு
உள்ளோடி நீயிருக்கும் பொழுது-உண்டோ
உலகத்தில் திறக்காத கதவு??