Saturday, February 20, 2010

வரமா சாபமா வார்த்தைகள்??

சொல்லால் கனத்தமனம் சூனியத்தால் இன்பமுறும்
நில்லா நினைவுகள் நின்றுவிடும்-பொல்லாக்
குரங்கு மனமிதுவுங் குன்றேறி நிற்கும்
விரல்பறிக்கும் ஞானக் கனி.

சச்சரவுக் கிச்சையாய் சாடுகிற சாட்டையும்
உச்சரிக்கும் சொல்லென் றுணர்வோமே-நச்சரிக்கும்
வார்த்தைகளைச் சாடி வரிசையிலே வாவென்று
சீர்த்தமதி சொன்னால் சுகம்

பாலை சுடுமென்றல் பழையகதை: மௌனத்தின்
சாலையிலே சூளையும் சோலைதான் - லீலையிதை
ஆக்குபவள் யாரென் றறியாமல் ஆடினால்
பாக்குவைக்க நேரும் பழிக்கு.

நாவு புரள்கையிலே நாமும் புரள்கின்றோம்
கோவில் புறாபோலக் கூச்சலிட்டு-ஆவலாய்
சேர்த்துவைத்த சொந்தம் சுடுதணலாய் ஆவதும்
நீர்த்துவிட்ட வாழ்வின் நிலை.

தானாய் விழுந்தமழை தேனாய் கனிந்தகனி
ஆனால் அதுதானே ஆனந்தம்- ஏனாம்
அமிலமழை வார்த்தை அழுகிவிட்ட வாழ்க்கை
திமிர்தானே நாக்குத் திமிர் .

3 comments:

Unknown said...

romba nalla irukku.............

marabin maindan said...

நன்றி துளசி..

marabin maindan said...

நன்றி துளசி..