Saturday, February 20, 2010

ஆடலில் பேசிடுவான்

கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக்
கிறுக்கன் தலைசுமந்தான்
ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி
ஊர்த்துவம் ஆடுகிறான்
ஈற்றினை அறியா வான்வெளியெங்கும்
ஈசன் ஆடுகிறான்
போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின்
பாட்டினுக் காடுகிறான்

நாதம் இவனது நாபியில் பிறந்தது
நாளும் புதிய ஸ்வரம்
பாதம் அசைந்திட பூமி சுழலுது
பொழுதுகள் இவனின் வரம்
வேதம் இவனது வார்த்தையில் மலர்ந்தது
வானம் இவனின் தவம்
மோதி அலைகிற பேரலை யோசிவன்
மூச்சினில் உருண்டு வரும்



சாத்திரம் கிரியைகள் சார்புகள் அனைத்தையும்
சாய்ப்பது இவனின் வெறி
தோத்திரம் உகக்கிற தோடுடை செவிகளில்
தோய்வது கவிதை வரி
ஆத்திரம் ஆனந்தம் அத்தனை யும்இவன்
ஆடலில் பேசிடுவான்
மாத்திரைப் போதினில் கோள்களை விழுங்கி
மீண்டும் படைத்திடுவான்

ஊன்றிய திருவடி ஒருமுறை சுழல்கையில்
ஊழ்வினை முடிந்துவிடும்
தோன்றிய பால்வெளி துலங்கிடும் படியவன்
தாண்டவம் நிகழ்ந்துவிடும்
ஈன்றவர் என்றிங்கு யாருமில் லாதவன்
ஈசனின் பிள்ளைகள் நாம்
மான்திகழ் கையினன் மழுவுடை நாயகன்
மலரடி சலங்கைகள் நாம்

No comments: