Sunday, February 21, 2010

ஓசை எழுப்பும் உள்மனமே

வீசிய பந்தின் விசைபோலே                                   
வெய்யில் நாளின் திசைபோலே
ஏசிய வார்த்தையின் வலிபோலே                        
எழுதி முடியாக் கவிபோலே
பேசிட முடியாத் தீவிரமாய்
பேறுகாலத்தின் ஆத்திரமாய்
ஓசை எழுப்பும் உள்மனமே



 உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே
 எல்லாச் சொல்லையும் சொல்வதெங்கே
எல்லாக் கனவையும் காண்பதெங்கே
நில்லாப் பொழுதுகள் மீள்வதெங்கே
நினைவுகள் அனைத்தையும் வாழ்வதெங்கே
கல்லால் எறிந்த காயங்களே
கண்ணைக் கட்டிய மாயங்களே
பொல்லா விடுகதைப் பொழுதுகளே
போதிக்க என்னென்ன பாடங்களே

உலகை வெல்வதும் ஒருபொழுது
உவகை மிகுவதும் ஒருபொழுது
நிலைகள் குலைவதும் ஒருபொழுது
நிஜங்கள் உணர்வதும் ஒருபொழுது
மலராய் மலர்வதும் ஒருபொழுது
மெழுகாய் உருகவும் ஒருபொழுது
மலையாய் எழுவதும் ஒருபொழுது
மனவான் காண்பது பலபொழுது

காட்சிப் பொருளாய்இருக்கும்வரை
காண்பவை எல்லாம் போராட்டம்
சூழ்ச்சிக் கிரையாய் ஆகும்வரை
சோர்வு கொடுக்கும் திண்டாட்டம்
சாட்சிப் பொருளாய் ஆனபின்னே
சட்டென்று விலகும் பனிமூட்டம்
ஆட்சி புரிகிற அமைதியிலே
ஆனந்தம் பருகிடு வண்டாட்டம்

No comments: