Saturday, February 20, 2010

இராமனிடம் சில கேள்விகள்




சித்திர மாடத்தின் மேலிருந்து-அந்தச்
சீதைதன் தாய்மடி பார்த்திருந்தாள்
எத்தனை நெஞ்சுரம் காகுத்தனே-உன்
அத்தை மடியினில் நடந்துவந்தாய்

கல்லாய்க் கிடந்த அகலிகையும்-உன்
கால்துகள் பட்டதும் பெண்ணானாள்
முள்ளாய் முளைத்த தாடகையும்-உன்
மோதுகணை பட்டேன் மண்ணானாள்?

நாத மொழிகேட்ட சபரியுமே-உனை
நேர்கொண்டு பார்த்ததில் வீடுபெற்றாள்
காதல் மொழிசொன்ன சூர்ப்பநகை-உன்
கண்களில் பட்டென்ன பாடுபட்டாள்

காதல் நெருப்பில் சிலகாலம்-கொடுங்
காட்டு நெருப்பினில் சிலகாலம்
ஆதரவில்லாமல் தென்னிலங்கை- மண்ணில்
அச்ச நெருப்பினில் சிலகாலம்

கற்பின் பெருங்கனல் சானகியும்-அய்யோ
கண்ட துயரங்கள் பார்த்துவிட்டாய்
அற்புதப் பெண்ணவள் வாடும்படி-நீ
அக்கினி யில்இட்டு வாட்டிவிட்டாய்



வாலியை மட்டுமா?யாரையும்நீ
வாழ்வினில் நேர்படக் கொல்வதில்லை
கால்ன் எனுமம்பை ஏவுகிறாய்-எவர்
கண்களின் முன்னும்நீ செல்வதில்லை

எல்லாம் மறைபொருள் உன்னிடத்தில்-உனை
எல்லா மறைகளும் தேடிவரும்
சொல்லால் அளக்கிற கம்பன்தமிழ் -உனை
சிக்கெனப் பிடித்துக் காட்டிவிடும்

காலக் கணக்குகள் நீத்தவன்நீ-என்று
காரியம் யாவிலும் காட்டிக் கொண்டாய்
சீலக் கவிமன்னன் கம்பன்வைத்த-ஒரு
செந்தமிழ்க் கண்ணியில் மாட்டிக் கொண்டாய்

No comments: