Sunday, February 6, 2011

கர்ணன்-3

பக்தியும் பணிவும் பொங்கிடும் மனதுடன்
பணிந்தே கர்ணன் நிற்கின்றான்
சக்தியின் களஞ்சியம் பரசுராமனின்
குருகுலம் தனிலே கற்கின்றான்
தந்தையை கொன்றவன் ஷத்ரியன் என்பதில்
தாங்க முடியாக் கோபத்திலே
அந்தணருக்கே வில்வித்தை போதனை
பரசுராமனின் கூடத்திலே
 
தானெந்த குலமென்று தெரியாத தனால்
மாணவன் ஆனான் கர்ணனுமே
ஆனந்த மாக போதனை வழங்கி
ஆதரித்தான் பரசு ராமனுமே
மாணவன் மடியில் தலைவைத்துக் கிடந்தான்
முனிவன் ஒருநாள் மதியத்திலே
ஆணவ இந்திரன் சதிசெய்ய வந்தான்
அங்கொரு வண்டின் வடிவத்திலே
 


கர்ணனின் தொடையினை வண்டு துளைத்திட
கடும்வலி பொறுத்தே அமர்ந்திருந்தான்
வருகிற இரத்தம் முகத்தில் பட்டதும்
பரசுராமன் விழித்தெழுந்தான்
ஷத்ரியன் தானே வலிபொறுப்பான் எனும்
சிந்தனை எழுந்தது முனினுக்கு
கற்ற வித்தை கைவிடும் என்றே
கொடுத்தான் சாபம் கர்ணனுக்கு
 
தந்தையை அறியான் தாய்முகம் அறியான்
குருவும் பகையா கர்ணனுக்கு?
எந்தத் திசையிலும் எதிர்கொள்ளும் வேதனை
இரக்க குணம்மிக்க மனிதனுக்கு
நடப்பதை எல்லாம் பொறுப்பதைத் தவிர
நல்லவன் இதயம் என்னசெய்யும்
இருப்பதை எல்லாம் கொடுப்பதில் தானே
கர்ணனின் இதயம் அமைதி கொள்ளும்

No comments: