Thursday, February 3, 2011

அவள்தான்


 பாடிடச் சொன்னவள் அவள்தான் -இந்தப்
பாதையைத் தந்தவள் அவள்தான்
தேடிய வெளிச்சமும் அவள்தான்-உள்ளே
தெரிகிற ஜோதியும் அவள்தான்
 
 
வீணையை மீட்டிடும் விரலாய்-என்
விதியினை ஓட்டிடும் குரலாய்
காணென்று காட்டிடும் அருளாய்-என்
கண்முன்னே வருபவள் அவள்தான்
 
அண்டத்தைப் பிண்டத்தில் அமைத்தாள்-அதில்
ஆயிரம் அதிசயம் சமைத்தாள்
கண்டத்தில் நீலத்தைத் தடுத்தாள்-எனைக்
கண்டதும் களுக்கென்று சிரித்தாள்
 
பாய்கிற கடலலை அவளே-வரும்
பாய்மரக் கப்பலும் அவளே
தாயவள் எங்கணும் ஜொலிப்பாள்-அவள்
திருக்கடையூரினில் இருப்பாள்
 
தாடங்கம் தானந்த இந்து-பிற
கோள்களும் அவளின்கைப் பந்து
நாடகம் நடத்திட நினைத்தாள்-அவள்
நலமென்றும் வலியென்றும் வகுத்தாள் 
 
அதிர்வுகள் அடங்கிடும் தருணம்-நகை
அழுகையும் முடிந்திடும் தருணம்
உதிர்கிற மலரென வருவாள்-இந்த
உயிருக்கு ஒருகதி தருவாள்

1 comment:

Unknown said...

அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்..